
ராஜபாளையம் அருகே தந்தையுடன் நீச்சல் பழக சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விபத்தில் ஒரு கை இழந்த இவர் தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இவரது மனைவி மதன பிரியா மில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கோகுல்கிருஷ்ணன் (வயது 8) மற்றும் வர்ஷனா ஸ்ரீ (வயது 6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகுல் கிருஷ்ணன் தற்போது 4 ம் வகுப்பும் வர்ஷனா ஸ்ரீ 2 ம் வகுப்பும் செல்ல உள்ளனர்.

வழக்கம் போல மதன பிரியா தனது குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை சக்திவேல் தனது 2 குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
லாரி ட்யூபை பயன்படுத்தி தனது 2 குழந்தைகளுக்கும் சக்திவேல் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் குழந்தைகள் மூழ்கியுள்ளனர். ஒரு கை இழந்த சக்திவேல் தனது குழந்தைகளை காப்பாற்ற இயலாமல் போனதால்
அருகே உள்ளவர்களை சக்திவேல் உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து பார்க்கும் முன்னதாக 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
உறவினர்களின் உதவியுடன் 2 குழந்தைகளும் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த கீழ ராஜ குலராமன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
2 குழந்தைகளும் இறந்த சம்பவம் கிராமப் பகுதியில் பரவியதால் சக்திவேல் வீட்டில் சுற்றி உறவினர்கள் திரண்டு நின்றனர். ஏற்கனவே மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்து வரும் நிலையில் எதிர்பாராத துயர சம்பவம் காரணமாக பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.