
- 2001ல் அதிமுக., ஆட்சிக்கு வந்த போது, முந்தைய திமுக. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தது.
- பின் 2006ல் திமுக., ஆட்சிக்கு வந்த போது, அந்த வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப் பட்டார்.
- மீண்டும் 2016ல் அதிமுக., ஆட்சியில் இருந்த போது, பொன்முடி விடுவிக்கப் பட்டதை நீதிமன்றம் ரத்து செய்தது.
- இப்போது மீண்டும் திமுக., ஆட்சியில் தற்போதைய அமைச்சர் பொன்முடி மீது உள்ள வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தற்போதைய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கடந்த 1996 முதல் 2001 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக அப்போதைய திமுக., அரசில் பதவி வகித்தார். அப்போது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் சட்ட விரோதமாகக் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களைத் தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த நேரம் திமுக.,வினர் கடுமையான வகையில் நில அபகரிப்பு புகார்களில் சிக்கியிருந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து நிலப்பறிப்பு புகார்கள் வந்ததால், அதிமுக., ஆட்சிக்கு வந்ததும் இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்து அடுத்து வந்த தேர்தலை சந்தித்தார்.
இந்நிலையில், பொன்முறி அபகரித்ததாகக் கூறப்பட்ட அந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, பொன்முடிக்கு எதிராக 2003-ல் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் 2006ல் திமுக., அரசு அமைந்ததும், தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது.
இதன் பின்னர் 2011ல் அதிமுக., ஆட்சி அமைந்தது. 2016ல் இரண்டாவது முறையாக அதிமுக., ஆட்சி அமைந்த போது, பொன்முடியை விடுவித்ததற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் முடிவில் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்புநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 6.9.2017 அன்று உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணமடைந்தனர். இதனால், பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் அரசு தரப்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2021ல் மீண்டும் திமுக., ஆட்சி அமைந்தது. இதன் பின்னர், இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் கூறியிருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், “நிலத்தை அபகரித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே பொன்முடி உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதாகக் குறிப்பிடப்பட்டது.