
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்.15 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பயனாளிகளை கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் தொகையைப் பெறுவதற்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.
** முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. இவர்கள் விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.
** ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
***அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது.
இப்படி எட்டு வித நிபந்தனைகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய சாமானிய மகளிருக்கு இந்த 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் மாநில அரசால் விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள், தங்களின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்காக, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.