
தி.மு.க. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் சோதனை ஏன் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
அண்மையில்தான் இரு முக்கிய வழக்குகளில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். பொன்முடி 1996-2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக நிலம் வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இதிலும் போதிய ஆதாரம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார் . இந்த நிலையில் இன்று திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ளவர் பொன்முடி. அவரது மகன் பொன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு இன்று காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வந்தது. அக்குழு பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையின்போது உள்ளூர் போலீசாரை அழைத்து வராமல், தங்கள் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினரை உடன் அழைத்து வந்திருந்தனர்.
இதுபோல் ஒன்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்.பி. வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. இங்கும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள்.
விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் திருபாணாழ்வார் தெருவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் கீழ் தளத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுடன் வந்தபோது, அமைச்சர் பொன்முடி வீடு பூட்டப்பட்டிருந்தது. பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்ட எவரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப் பட்டிருந்ததால் அமைச்சரின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு வீட்டைத் திறக்குமாறு கூறினார்கள். ஆனால் அமைச்சரின் உத்தரவு இல்லாமல் வீட்டை திறக்க முடியாது என அவர் கூறியதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காலை 8 மணி அளவில் பொன்முடியின் உறவினர் அங்கு வந்து வீட்டைத் திறந்து விட்ட பிறகு, ஒவ்வொரு அறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வீட்டின் கீழ் தளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இந்த திடீர் சோதனை ஏன் நடைபெற்று வருகிறது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உலவுகின்றன.
கௌதம சிகாமணி வெளிநாடுகளில் அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறி முதலீடு செய்ததாக கூறி ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி இருந்தனர். விழுப்புரத்தில் கடந்த 2012ம் ஆண்டு செம்மண் குவாரிகளில் விதிகளுக்கு முரணாக மண் அள்ளியதில் ரூ.28 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் அமைச்சர் பொன்முடி, கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சைதாப்பேட்டை ஸ்ரீநகர் இல்லம், சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் மகன் இல்லம், விழுப்புரம் பொன்முடி இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வரும் இந்த சோதனைகள் குறித்த தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான திமுக.,வினர் குவிந்தனர்.