
மகளிர் உரிமைத் தொகை வழங்க ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் டார்கெட் நிர்ணயித்து வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்து நிதி திரட்ட மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானதைக் குறிப்பிட்டு, தமிழக காவல் துறை அதை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகளிர் உரிமைத்தொகை வழங்க மாஸ்டர் பிளான் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்கு மாறானது. மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை. இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். -இவ்வாறு தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
