அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கண்டுபிடிக்க முடியாத நபராக, தேடப்படக்கூடிய நபராக உள்ள மாணிக்கம் தாகூரை சென்ற முறை தேர்ந்தெடுத்ததன் விளைவு, அருப்புக்கோட்டையில் சாலை வசதி குடிநீர் வசதி, ரயில் வசதிகள் என அனைத்து வசதிகளும் மோசமாக உள்ளதை பார்க்கிறோம்.
சென்ற முறை அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் நிறைய தொழிற்சாலைகளை கொண்டு வருவோம் என கூறினார். எதுவும் செய்யவில்லை. அருப்புக்கோட்டை தொகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். அப்படிப்பட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதே போல விஜயகாந்த் இந்த மண்ணில் இருக்கும் வரை திமுகவையும் அதிமுகவையும் எதிர்த்தார். விஜயகாந்த் கொள்கைக்கு நம்பிக்கை எதிராக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என குற்றம் சாட்டி பேசினார். விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் விஜயகாந்த் ரசிகர்கள் தாமரைக்கு தான் வாக்களிப்பார்கள். மோடி அரசால் சிறுபான்மையிருக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது ஆனால் திமுக கூட்டணியினர் வேண்டுமென்று பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள கடைகளில், பொது மக்களிடம் பிஜேபி தேர்தல் அறிக்கை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பிரசாரத்தில் பிஜேபி மாவட்ட நிர்வாகி கஜேந்திரன், மற்றும் பிஜேபி மாவட்ட விவசாய அணி செயலாளர் அழகர்சாமி,பாண்டி ,சுந்தரம், சிறுவாமன் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.