சிவகங்கை: கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கி வைப்பு!

Published:

cooptex sales in sivagangai - 2026
#image_title

சிவகங்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நடப்பாண்டிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.93.00 இலட்சம் இலக்கீட்டினை எய்துவதற்காகவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும் என சிறப்பு தள்ளுபடி விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்துப் பேசினார்.

சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இன்றைய தினம் (28.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் குத்து விளக்கேற்றி வைத்து, சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில், கோ-ஆப்டெக்ஸ் என, அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்
சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளின் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிக்கைக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

மேலும், உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது.

இதுதவிர, பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்
கப்பட்டுள்ளன.

மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள் / லினன் சட்டைகள், லினன் மற்றும் பருத்தி (Linen/Cotton) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும், மகளிருக்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள்
ஆகியோர் கைத்தறி ஆடைகளை வாங்கும் பொழுது, உற்பத்தி திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும் பொழுது, நெசவாளர்களின் வளர்ச்சி அதிக நிலையை எட்டும். தற்பொழுது, தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளுடன் வெளிவருகின்றன. இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

நம் ஒவ்வொருவரின் ஆதரவு கரமும், அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியாகும். எனவே கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டிற்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் சிவகங்கை, காரைக்குடி ஆகிய இரண்டு விற்பனை நிலையத்திலும் தீபாவளி விற்பனை ரூ.66.78 இலட்சம் விற்பனை செய்யப்பட்டு, முழுவதுமாக இலக்கீடு ஏய்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 2024-2025 நடப்பாண்டிற்கு விற்பனை குறியீடாக ரூ.93.00 இலட்சம் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான விற்பனையும் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின்வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கீடை விட அதிக அளவில் விற்பனை மேற்கொண்டு, மாவட்டத்திற்கு பெருமை தேடி தர அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (கூ/பொ) செந்திவேல், மேலாளர் முல்லைகொடி மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img