சென்னை:
கடந்த 2017 நவ.30ல் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது திடீரென ‘ஒக்கி’ புயலாக மாறி, யாரும் எதிர்பாராத வகையில் கன்னியாகுமரியை கடுமையாகத் தாக்கியது. அப்போது, சரியான புயல் எச்சரிக்கை விடுக்கப் படவில்லை என்றும், அதனால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நூற்றுக்கணக்கில் பாதிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது குமரி கடற்பகுதியில் அதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளதால், கடற்படை, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வாயிலாக வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒக்கியை போன்ற புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விடுத்த, புயல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பில், இந்திய பெருங்கடலில் இலங்கையின் தென்பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது நாளை காலை வடமேற்கு திசையில் நகரும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடலில் வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
எனவே குமரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ., வேகத்திலும், சில நேரம் 60 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளாவின் கடற்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் மீனவர்கள் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.