
”நாசிக் டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் பணிபுரியும் 25 – 32 வயதுடைய பெண்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கிருந்த ஊழியர்கள் பலர், பாலியல் தொல்லை கொடுத்தாக பெண் ஊழியர்கள் போலீசில் புகாரளித்தனர். அதில், ‘முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.’ ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது போன்ற செயல்களும் நிறுவனத்தில் நடந்தன. மறுக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். ‘உயர் அதிகாரிகள் இந்தக் கொடுமைகளைத் தடுக்காமல் மறைமுகமாக ஊக்கப்படுத்தினர்’ என புகார்களில் தெரிவித்திருந்தனர்.”
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தில், ஹிந்து பெண் பணியாளர்கள் பலரை இஸ்லாத்துக்கு மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், மகாராஷ்டிர மாநில பெண் போலீஸ் அதிகாரிகளின் ரகசிய ஆபரேஷனில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். எனினும் இந்தச் சம்பவத்தில் முக்கிய பெண் நிதா கான், தலைமறைவாக உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நாசிக் போலீசாருக்கு ஒரு முக்கியமான புகார் வந்தது. நாசிக்கில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றும் இளம் ஹிந்து பெண் ஊழியர் ஒருவர், தான் வேலை பார்க்கும் இடத்தில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களை பின்பற்றுமாறு கட்டாயப் படுத்தப்படுவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். நிறைய பெண்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு சில புகார்கள் வந்தன.
போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் முஸ்லிம்களே அதிகளவில் நியமிக்கப்பட்டதும், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஹிந்து பெண்களுக்கு தொல்லை தந்ததும் உறுதியானது.
இதையடுத்து, நாசிக் போலீஸார் இந்த விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்ட, உண்மையைக் கண்டறியும் வகையில் ரகசிய திட்டம் தீட்டினர். அதன்படி, பெண் போலீஸ் அதிகாரிகள், அந்த அலுவலகத்தின் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்கள் போல் ரகசியமாக அலுவலகத்தினுள் நுழைந்தனர். அந்நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தனர். குறிப்பாக மூத்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீது அதிகப்படியான கவனம் செலுத்தினர். இந்த ரகசிய கண்காணிப்பு மூலம் பல உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.
தொடர்ந்து நடந்த இந்த மறைமுக கண்காணிப்பில், பணியிடத்தில் நடந்த தினசரி செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த ரகசியக் கண்காணிப்பின் மூலம், தங்களுக்கு வந்த தொடக்க நிலை குற்றச்சாட்டுகளை போலீசார் உறுதிப்படுத்தினர்.
முதல் எப் ஐ ஆர் பதிவு:
மார்ச் மாதத்தில் டியோலாலி காவல் நிலையத்தில் முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஒரு இளம் பெண் ஊழியர், தன் சக ஊழியர் தானிஷ் ஷேக் மீது புகார் அளித்தார். டேனிஷ் தனக்கு திருமணமானதை மறைத்து, தன்னைத் திருமணம் செய்வதாக உறுதி அளித்து கட்டாயப்படுத்தி உறவு வைத்ததாகவும், பின்னர் தனது மதப் பழக்கங்களை மாற்ற முயற்சித்ததாகவும், தினமும் தொழுகை நடத்தச் சொன்னதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் டேனிஷ் ஷேக் மற்றும் தௌசிப் அத்தார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தௌசிப் அத்தாரின் மொபைல் போனில் இருந்த போட்டோக்கள் மேலும் பல புகார்களுக்கு வழிவகுத்தன. அந்த போனில் மற்றொரு பெண் ஊழியர் புர்கா அணிந்த புகைப்படம் இருந்தது. இதனால் விசாரணை விரிவடைந்தது. அதன் மூலம் மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை டியோலாலி கேம்ப் மற்றும் மும்பை நாகா காவல் நிலையங்களில் மொத்தம் ஒன்பது எப்ஐஆர்.,கள் பதிவாகின. பெரும்பாலான புகார்கள் 18 முதல் 25 வயது வரையிலான இளம் பெண் ஊழியர்களிடம் இருந்து வந்தன.
வழக்கு 1 : (ஜூலை 2022 – பிப்ரவரி 2026)
குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ் ஷேக், தௌசிப் அத்தார் மற்றும் நிடா கான் ஆகியோர், ஹிந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்து ஒரு பெண் ஊழியரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரான தௌசிப் அத்தார், திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யாகக் கூறி பாதிக்கப்பட்டவருடன் உடல் உறவு கொண்டார், அதே நேரத்தில் டேனிஷ் ஷேக் அலுவலக வரவேற்பறையில் அவருடன் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு அவரை மானபங்கத்திற்கு உள்ளாக்க முயன்றார்.
வழக்கு 2: (மே 2023 – மார்ச் 19, 2026)
குற்றம் சாட்டப்பட்டவர்களான ரஸா மேமன் மற்றும் ஷாருக்கான் குரேஷி ஆகியோர், ஒரு பெண் ஊழியரை முறைத்துப் பார்த்து, தவறான முறையில் தொட்டதாகவும், அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்து அவமானகரமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முறையான புகார் அளிக்கப்பட்ட போதிலும், நிறுவனத்தின் தலைமை அதிகாரி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவரை ஊக்குவித்தாராம்.
வழக்கு 3 : (2022 – பிப்ரவரி 2026)
குற்றம் சாட்டப்பட்ட ஷாபி ஷேக், கூட்டங்களின் போது பாதிக்கப்பட்டவரை ஆபாசமான முறையில் முறைத்துப் பார்த்து, கேலிக்கு உள்ளாக்கினாராம். தௌசிப், பாதிக்கப்பட்டவரின் திருமண வாழ்வில் குழந்தைகள் இல்லாதது குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்து, உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
வழக்கு 4 : (மே 4, 2025 – டிசம்பர் 2025)
குற்றம் சாட்டப்பட்ட தௌசிப் அத்தார், பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமான கேள்விகளைக் கேட்டதுடன், அநாகரிகமான சைகைகளைச் செய்தார். அலுவலகத்தில் மற்ற ஹிந்துப் பெண் ஊழியர்கள் முன்னிலையில், ஹிந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்து களைக் கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தினார். அலுவலகத்தில் மற்ற ஹிந்துப் பெண் ஊழியர்கள் முன்னிலையில், ஹிந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துக்களைக் கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தினார்.
5வது சம்பவம் : (2022 – மார்ச் 23, 2026)
குற்றம் சாட்டப்பட்ட தௌசிப் அத்தார், டேனிஷ், ஷாருக்கான் ஷேக், ரஸா மேமன் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் மதத்தை அவமதித்ததுடன், அவரை வலுக்கட்டாயமாகத் தொழுகை செய்யும்படி கட்டாயப்படுத்தினர். அவருக்கு மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவை வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு, மதமாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
6வது சம்பவம் : (செப்டம்பர் 6, 2024 – பிப்ரவரி 2026)
குற்றம் சாட்டப்பட்ட ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக் ஆகியோர் பெண் ஊழியரின் உடல் குறித்து ஆபாசக் கருத்துகளைத் தெரிவித்து, வேண்டுமென்றே தவறான முறையில் தொட்டனர். இதிலும், குற்றம் சாட்டப்பட்ட தௌசிப் அத்தார், ஹிந்து தெய்வங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
7வது சம்பவம் : (2025 – மார்ச் 2026)
குற்றம் சாட்டப்பட்ட ஆசிப் அன்சாரி, ஷாருக்கான் குரேஷி, ராஸா மெமன், தௌசிப் அத்தார், ஷபி ஷேக் ஆகியோர் பாதிக்கப்பட்டவரைப் பின்தொடர்ந்து, ஆபாசக் கருத்துகளைத் தெரிவித்து, தீய நோக்கத்துடன் தொட்டுள்ளனர். அவர்கள் கூட்டாகச் செயல்பட்டு, ஹிந்து மதத்திற்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
8வது சம்பவம் : (ஜனவரி 2025 – தற்போது வரை)
குற்றம் சாட்டப்பட்ட ராஸா மெமன், ஷபி ஷேக் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் விருப்பத்திற்கு எதிராக அவருடன் உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். ஷபி அவரிடம் வலுக்கட்டாயமாக காதலை முன்மொழிந்தார். ரஸா மெமன் அவரது உடல் குறித்த ஆபாசக் கருத்துகளைத் தெரிவித்து, அவரை முறையற்ற விதத்தில் தொட முயன்றார்.
9வது சம்பவம் : (ஜனவரி 2026 – ஏப்ரல் 1, 2026)
குற்றம் சாட்டப்பட்ட ரஸா மெமன், ஷாருக்கான் குரேஷி ஆகியோர் பாதிக்கப்பட்டவருடன் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு, அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர் மறுத்தபோதும், தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி, அவரைக் கண்காணிப்பில் வைத்து, அவரது உடல் குறித்து ஆபாசமான கருத்துகளைத் தெரிவித்து மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.
பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியாக தொடுதல், பாலியல் ரீதியான பேச்சுகள், பணிச் சுமையை அதிகரித்து அழுத்தம் கொடுத்தல், மத மாற்றத்தை கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். முதலில் புகார் அளிக்க பயந்த பெண்கள், கைதுகள் நடந்த பிறகு தைரியமாக புகார் கூற முன்வந்தனர். இதில், இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் எச்ஆர் அதிகாரி அடங்குவர்.
இவர்களில் பலர் குழுத் தலைவர்கள், மூத்த ஊழியர்கள். கைது செய்யப்பட்ட எச்ஆர் அதிகாரி, நிறுவனத்திற்குள் வந்த பாலியல் தொல்லை புகார்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளான முக்கியமானவரான நிதா கான் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை தொழில்நுட்ப உதவியுடன் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவர் தரப்பில் முன் ஜாமின் கோரி மனு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தாம் கர்ப்பம் தரித்திருப்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
நாசிக்கில் நட்நத இந்தக் கைதுகள் ஒட்டுமொத்த மும்பையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தால் நாசிக் பிபிஓ அலுவலகத்துக்கு வெளியே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. முக்கியமாக பெண்கள் பெரிய அளவில் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.
அலுவலகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் எந்த நேரத்திலும் மிகப்பெரிய வன்முறையாக மாறக்கூடும் என்றும், டிசிஎஸ் அலுவலகம் சூறையாடப் படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் போலீஸார் எச்சரித்தனர். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு டிசிஎஸ் நாசிக் அலுவலகம் காலவரையின்றி மூடப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்தது. ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே தங்களுடைய பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அலுவலக விசாரணை நடக்கும் என்றும் அது உறுதியளித்தது.
இந்தப் பின்னணியில் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக்கின் அறிவுறுத்தலின் பேரில், இந்த வழக்குகளை விசாரிக்க ஏசிபி (குற்றம்) சந்தீப் மிட்கே தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ., வசம் செல்லும் என்று கூறப்பட்டது.
இதனிடையே மதமாற்ற விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், நாசிக்கில் உள்ள ஐ.டி., – பி.பி.ஓ., நிறுவனத்தில் நாளை நேரடி விசாரணை மேற்கொள்ள, உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாசிக் டிசிஎஸ்., நிறுவன விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ‘கட்டாய மதமாற்றத்தை தடுக்க, நாடு முழுதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொருவருக்கும், தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் உரிமை உண்டு; ஆனால், இந்த சுதந்திரம் பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உட்பட்டது என அரசியல் சாசனம் சொல்கிறது. ஐ.டி., நிறுவனத்தில் நடந்த இந்த விவகாரத்தை சாதாரணமான குற்றமாகப் பார்க்காமல், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பயங்கரவாத செயலாக நீதிமன்றம் கருத வேண்டும்.
அதற்கேற்ற சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய மதமாற்றங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கின்றன. இவை, பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் கையாளப்பட வேண்டும். மதமாற்றம் தொடர்பான வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரித்து, விரைவான தீர்ப்பு வழங்க நாடு முழுதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இத்தகைய வழக்குகளில் புலனாய்வு மற்றும் விசாரணையை துரிதப்படுத்த காலக்கெடு விதிக்கப்பட வேண்டும் – என்று அதில் கூறப்பட்டுள்ளது.



