சென்னை: தமிழகம் முழுவதும் ஜன.18 இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் தவணையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18-ஆம் தேதியான இன்றும், இரண்டாவது தவணையாக பிப்ரவரி 22-ஆம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.. அதன்படி இன்று காலை 7 மணிக்கு இந்த முகாம் துவங்கியது. இன்று மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 சொட்டு மருந்து மையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கும் முகாமில் சொட்டு மருந்து கொடுக்கலாம். பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் 1,652 நகரும் மையங்கள் செயல்படுகின்றன. மேலும், தொலைதூரப் பகுதி, மலைவாழ் பகுதி, எளிதில் பயணம் மேற்கொள்ள முடியாத பகுதி மக்களுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து கொடுக்கப்படாமல் விடுபடும் குழந்தைகளைக் கண்டறிவதற்காக, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகின்றது. இந்தப் பணிகளுக்காக சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 2 லட்சம் பேர் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
Popular Categories


