சென்னை:
காவல் துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில்… தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று அதிர்ச்சிக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.
இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் நேற்று சிறை காவலர்களை சிறைப்பிடித்ததும், ஜெயிலர்கள் தாக்கப்பட்டதும், ஏடிஜிபி பேச்சுவார்த்தை நடத்தி காவலர்களை மீட்டதும் தமிழகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்து முன்னணி மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்தை அரசு கண்கொண்டு காண மறக்கின்ற நிலையில், இத்தகைய கோரத் தாண்டவம் ஆடி முஸ்லீம் பயங்கரவாதிகள் காவல்துறைக்கு பாடம் புகட்டியுள்ளனர்.
சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளே இத்தகைய கொடூர செயலைச் செய்ய முடிகிறது என்றால், தமிழக அரசின் செயல்பாடு எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். சிறையிலேயே சிறை காவலர்கள் சிறை வைத்து மிரட்ட பயங்கரவாதிகள் துணிந்துவிட்டனர். வேறு கைதிகள் இதுபோல் நடந்தால் இப்படித்தான் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ஏன் இந்த மென்மையான போக்கு?
ஊடகத்துறையினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. காவல்துறை பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையை, துணை இராணுவப் படையை கேட்கும் நிலையில் தமிழகம் உள்ளது. மனித உரிமை பேசுவோர், தொடர்ந்து காவலர்கள் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகும்போது ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? காவலர்கள் மனிதர்கள் இல்லையா?!
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அச்சுறுத்தி திரைப்படங்களைத் தடுத்தனர். அப்போதெல்லாம் அரசு ஓட்டு வங்கிக்கு பயந்து முஸ்லீம் பயங்கரவாதிகளுக்குத் துணைபோனது. ஆம்பூர் கலவரத்திலாவது தமிழக அரசு பாடம் கற்றிருக்க வேண்டும். அங்கு காவல் துறை அதிகாரிகளை கைவிட்டது அரசு. விளைவு புழல் சிறைக் கலவரம். தமிழக அரசிற்கும், சிறைத் துறைக்கும் இவையெல்லாம் அவமானம் ஆகும்.
பாடி சுரேஷ் படுகொலை செய்த முஸ்லீம் பயங்கரவாதிகளை கைது பண்ணி ஒருவருடம் முடிந்த நிலையிலும், அவர்களுக்கு உதவியவர்கள், பதுங்கியிருக்க இடம் கொடுத்தவர்கள், பண உதவி செய்தவர்கள் போன்ற குற்றவாளிகளுக்கு உடந்தையானவர்கள் கைது செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையின் காலதாமதத்தை காரணம் காட்டி பயங்கரவாதிகளை ஜாமீனில் விடுவிக்கவும் அரசு உதவியோடு ரகசிய திட்டம் இருந்ததாகத் தெரிகிறது.
பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்காத நிலையில், அதுவும் செயலற்று கிடக்கிறது.
இன்று புழல் சிறையில் இருந்த முஸ்லீம் பயங்கரவாதிகளை வேறு வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுவும் முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளின் செயல் திட்டம் தான். ஒவ்வொரு வாய்தாவிற்கு இவர்களை கொண்டு வந்து கொண்டு செல்வது பெரிய கேள்விக் குறியாகும். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மற்ற சிறைகளில் இருக்கும் பயங்கரவாதிகளுடன் இவர்கள் கலந்தாலோசித்து மீண்டும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற வழிவகுத்துக் கொடுத்துவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.
இரண்டு நாட்கள் முன்பு 72 மாடுகளை கடத்தி வந்த லாரியை பிடித்தவுடன், தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்த முஸ்லீம் கூட்டத்திற்கு பயந்து காவல்துறை நள்ளிரவில் நீதிபதியின் வீட்டிற்கே சென்று மாடுகளை விடுவிக்க உத்தரவு பெற்றனர். ஒவ்வொரு லாரியிலும் 6 மாடுகளை ஏற்றிச் செல்ல நீதிபதி உத்திரவிட்டுள்ளார். இதுவும் சட்டத்திற்குப் புறம்பானது இல்லையா? கூட்டமாக வந்தால் நீதியை மிதிக்கும் முன் உதாரணத்தை தமிழக காவல்துறை செயல்படுத்தி காட்டி, தமிழக அரசு செயழிந்துவிட்டதை உறுதி படுத்தி உள்ளது. இது வெட்கக்கேடானது.
நேற்று புழலில் முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தது காவலர்கள், ஜெயிலர்கள். ஆனால், முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டதாக முஸ்லீம் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி பிரச்னையை திசைத்திருப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசு துணைபோகலாமா?
மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.


