கொல்லம்:
கேரளத்தில் கழிவறை வசதிகளை பரவலாக்க, கழிவறைகளைக் கட்ட ரூ.100 கோடி அளிப்பதாக அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்த மயி மடம் உள்ளது. இங்கே வைத்து அமிர்தானந்த மயி தனது 62-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் கழிவறைகளைக் கட்டுவது மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என அமிர்தானந்த மயி அறிவித்தார். அத்துடன் அதற்கான உத்தரவாதத்தை முதல்வர் சாண்டியிடம் வழங்கினார்.
இது குறித்து அமிர்தானந்த மயி குறிப்பிட்ட போது, “வளர்ச்சி, வறுமை என இந்தியாவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒரு முகம் அறிவியல், தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்றொரு முகம் வறுமை, கல்லாமை, உடல்நலக் குறைவு, பெண்களுக்கு எதிரான குற்றம், சுகாதாரமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நம் நாடு வல்லரசாக வேண்டுமானால் இந்த இரண்டு முகங்களையும் அழகான முகமாக இணைக்க வேண்டும்” என்றார்.
முதல்வர் உம்மன் சாண்டி இதுகுறித்துப் பேசும் போது, “மாதா அமிர்தானந்த மயி மடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, “மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சேவையால் சாதி, மத, இன, பாலின பேதமின்றி அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு அமிர்தானந்த மயி மடம் ஏற்கெனவே ரூ.100 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.