வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்கான 90 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவிததது.
கருப்பு பண விவரத்தை தெரிவிப்பதற்காக, டெல்லி வருமான வரி அலுவலக கட்டிடத்தின் 5-வது தளத்தில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று கடைசி நாள் என்பதால், காலையில் இருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிலர் நேரில் வந்திருக்க, வேறு சிலர் சார்பில் அவர்களின் ஆடிட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து, சமர்ப்பித்தனர். ஒரு நபருக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆனது. ஆவணங்களை சரிப்படுத்தி வைக்க வருமானவரி அலுவலக ஊழியர் ஒருவர் உதவினார்.
முதலில், டெல்லியைச் சேர்ந்த தந்தை-மகன் வந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று விவரங்களை அளித்தனர். ராஜஸ்தான், கர்நாடகாவில் இருந்தும் வந்திருந்தனர். ஆனால், எவ்வளவு தொகைக்கு கணக்கு பெறப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சில ஆடிட்டர்கள், படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை படம் எடுத்து, யார் சார்பாக வந்திருந்தார்களோ, அவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி வைத்த வினோதமும் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், நள்ளிரவு வரை மையம் செயல்படும் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். நேற்று வரை கருப்பு பண விவரங்களை தெரிவித்தவர்களுக்கு ‘பெமா’ உள்ளிட்ட 5 சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது .


