நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்செங்கோடு டி.எஸ்.பி. அலுவலகத்திலும், எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீசார் வரை விசாரணை நடத்தி தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
மேலும் என்ஜினீயர் கோகுல்ராஜ், கொலை வழக்கு, அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளிடமும், அவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள யுவராஜ் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் மாளவியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனவே அவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இன்று காலை ஆஜர் ஆகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை டி.எஸ்.பி.மகேஸ்வரி சேலம் ஜங்சனில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்த அவரிடம் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


