தி.மு.க. பிரமுகர் ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் கைதான ‘அட்டாக்’ பாண்டியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஆனால் முழுமையாக விசாரிக்கவில்லை. எனவே மேலும் அவகாசம் வேண்டும் என போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தர விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ‘அட்டாக்’ பாண்டியை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரணை அதிகாரிகள் கிடிக்கிபிடி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ‘பொட்டு’ சுரேசுக்கும், தனக்கும் எப்போது இருந்து விரோதம் ஏற்பட்டது. தனது அரசியல் வளர்ச்சிக்கு எந்த வகையில் அவர் தடங்களாக இருந்தார். ‘பொட்டு’ சுரேஷ் கொலைக்கு பிறகு தன்னை போலீசார் தேடி வந்ததால் யார்–யாரை சந்தித்து உதவிகள் கேட்டேன். பண உதவிகள் செய்தது யார்–யார்? என்ற விவரத்தை கூறியதாக தெரிகிறது.
ஆனால் ‘பொட்டு’ சுரேஷ் கொலைக்கும், ‘அட்டாக்’ பாண்டிக்கும் உள்ள தொடர்பு பற்றியும், உதவிய அரசியல்வாதிகள் பற்றியும் கூற மறுத்ததாகவும் தெரிகிறது. நேற்று விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று மதியம் வரை இந்த விசாரணை நீடித்தது.
‘அட்டாக்’ பாண்டியிடம் 2 நாட்கள் விசாரித்து விட்டு 1–ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்ததால் இன்று மாலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ‘அட்டாக்’ பாண்டி ஆஜர்படுத்தப்படுகிறார்.


