தனது திருமணத்துக்கு உறவினர்கள் வராமல் போனதால், அவர்களுக்கான உணவு வீணாய்ப்போனது என்பதைப் புரிய வைக்க எண்ணிய ஒரு மணமகள், அவர்கள் உண்ணாமல் போன உணவுக்கு பில்லை அனுப்பியுள்ள விவகாரம் பேஸ்புக்கில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில், சிறு குழந்தையுள்ள ஒரு பெற்றோர் உறவினரின் திருமண நாளின்போது தமது குழந்தையை பார்த்துக்கொள்ள வேலையாள் வராதுபோனதால், குறிப்பிட்ட திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
பொதுவாக திருமணம் செய்ய முடிவெடுக்கும் தம்பதி, யார்? யார்? தனது திருமணத்துக்கு வரவேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றாற்போல ஆளுக்கு ஏற்ப உணவுவகைகளை ஆர்டர் செய்வர். அவர்களது இருக்கை எங்கேயிருக்க வேண்டும் என்பது வரை திருமணத்துக்கு நாள் பார்க்கும்போதே முடிவு செய்துகொள்வர்.
இருநூறு அல்லது முந்நூறு பேர் மட்டுமே பங்கேற்கும் இதுபோன்ற திருமணங்களின் செலவு குறைந்தது இருபது லட்சங்களைத் தாண்டும். இதுபோன்ற ஒரு திருமணத்தில், வராமல்போன உறவினர்கள் மீதான தனது வெறுப்பை காண்பிக்க எண்ணிய அந்த மணமகள் வரியுடன் சேர்த்து 75 அமெரிக்க டாலருக்கான பில்லை தனது உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
இந்தப் பில்லுக்கு பணம் செலுத்தினால் பிரச்சனை முடியுமா? அல்லது இதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்? என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பெண்மணிக்கு, ஆயிரக்கணக்கானோர் ஆலோசனை கூறி வருகின்றனர்.


