பிர்லா நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை என்று சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
2005-ம் ஆண்டு, பிரதமர் பதவியுடன் நிலக்கரி அமைச்சர் மந்திரி பதவியையும் மன்மோகன் சிங் வகித்தார்.
அந்த காலகட்டத்தில், ஒடிசாவில் உள்ள தலபிரா 2-வது நிலக்கரி சுரங்கத்தை, சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு நிராகரித்தும், தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ண்டால் கோவுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், ண்டால்கோ நிறுவனம், அதன் அதிகாரிகள் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா உள்ளிட்டவர்களுக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
ஆனால் சம்மனை எதிர்த்து மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை கடந்த ஏப்ரல் 1-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ. தனிக்கோர்ட்டின் சம்மனுக்கும், வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தலபிரா-2 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போது அவர் தெரிவித்ததாவது:-
ஒடிசாவில் மிகப்பெரிய அளவில் அலுமினியம் ஆலை ஒன்றை நிறுவும் வகையில், தலபிரா-2 நிலக்கரி சுரங்கத்தை தங்களுடைய நிறுவனத்துக்கு (ண்டால்கோ) ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு குமாரமங்கலம் பிர்லாவிடம் இருந்து 7.5.2005 தேதியிட்ட கடிதம் எனக்கு வந்தது.
(அந்த நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முடிவு எடுத்த) 25-வது தேர்வுக்குழு கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளுக்கு நான் ஒப்புதல் அளித்தேன்.
(இந்த கூட்டத்தில் தலபிரா-2 நிலக்கரி சுரங்கத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.)
எனவே அதில் எடுக்கப்பட்ட முடிவை நான் அறிவேன். அறிக்கை அளிக்குமாறு கேட்டு, பிர்லாவின் கடிதத்தை அப்படியே நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தேன்.
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்படும் என்று குமாரமங்கலம் பிர்லாவுக்கு நான் வாக்குறுதியோ, உறுதியோ வழங்கவில்லை.
எனவே நிலக்கரித்துறை அமைச்சர் , பிரதமர் என்ற நிலையில், குமார மங்கலம் எழுதிய கடிதங்களை பரிசீலிக்குமாறு நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி மட்டுமே வைத்தேன் என்பது தெளிவு. இதைத்தவிர நான் வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த நிலையிலும், குமார மங்கலம் பிர்லாவின் வேண்டுகோளை பரிசீலிப்பதில் நான் யாரையும் வற்புறுத்தவில்லை.
இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கிடம் இருந்து எனக்கு கடிதம் வந்தது. அதையும் நிலக்கரி துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பினேன். அது குறித்து பரிசீலித்து, கோப்பை மீண்டும் அனுப்புமாறு கூறி இருந்தேன்.
பிர்லா மற்றும் ஒடிசா முதலமைச்சர் எழுதிய கடிதங்கள், தேர்வுக்குழு ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டிருந்தது, புரிந்து கொள்ளப்படவேண்டியதாகும்.
இறுதியாக நிலக்கரித்துறை அமைச்சக செயலாளரின் குறிப்புடனும், பிரதமர் அலுவலக அதிகாரிகளின் குறிப்புகளுடனும் வந்த நிலக்கரித்துறை அமைச்சரகத்தின் பரிந்துரைக்கு நான் ஒப்புதல் வழங்கினேன். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் ண்டால்கோ என இரு நிறுவனங்களின் நலனையும் கருத்தில் கொள்வது சாத்தியமான ஒன்றுதான் என கூறப்பட்டிருந்தது.
இதில் நான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடவில்லை.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பொறுத்தமட்டில் ஒவ்வொரு விதிமுறையையும் நான் நினைவில் கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை இவ்வாறு மன்மோகன் சிங் என தெரிவித்தார்.


