முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சேக்சலீம் கடந்த மாதம் 28-ந்தேதி பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்திற்கு நேற்று மதியம் அவர் வந்தார்.
அவரை மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, செய்தி தொடர்பாளர்கள் பிரசாத், ரவிசந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பாரதீய ஜனதாவில் இணைந்தது குறித்து அப்துல்கலாம் பேரன் சேக் சலீம் கூறியதாவது:-
வளர்ச்சி பணிகளை முன் நிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி பாடுபட்டு வருகிறார். இந்த நாட்டை வளர்ச்சி பணியில் கொண்டு செல்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். அந்தவகையில் அவரால் ஈர்க்கப்பட்ட நான் பாரதீய ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். நாட்டுக்காக பாடுபடுவேன் என அவர் கூறினார்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நாட்டுக்காக தினம் தினம் உழைக்கும் பிரதமர் நரேந்திரமோடியால் ஈர்க்கப்பட்டு பாரதீய ஜனதாவில் இணைந்து இருக்கும் சேக்சலீமை வரவேற்கிறோம். அவரது உழைப்பு கட்சிக்கு பயன்படும். கட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று என்னிடம் அவர் உறுதியளித்து இருக்கிறார் என தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்


