அண்மையில் பட்டி தொட்டியெங்கும் படு வைரலாய் பரவிய ‘ஏர்டெல் 4ஜி ஸ்பீட் சேலஞ்ஜ்’ விளம்பரத்தில், அந்நிறுவனம் “எங்கள் சேவை தான் மிகவும் வேகமானது. உங்கள் சேவை, எங்களுடையதை விட வேகமானதாக இருந்தால், உங்கள் வாழ்நாளுக்கான மொபைல் பில்லை நாங்கள் செலுத்துகிறோம்” என்று கூறிவரும் நிலையில், இந்த விளம்பரம் மக்களை தவறான முறையில் வழிநடத்துவதாக விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி ஸ்பீட் சேலஞ்ஜ் விளம்பரம், முற்றிலும் தவறானதென்றும், அந்த விளம்பரம் மக்களை ஏமாற்றும்படி அமைந்துள்ளதாகவும் இந்திய விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் (ASCI) கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஏர்டெலின் 4ஜி சவால் விளம்பரத்தை உடனடியாக திரும்ப பெறும்படி பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பார்தி ஏர்டெல், “4ஜி தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதி வேகமானது என்று அனுபவப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த சேவையை வழங்கும் ஒரே நெட்வொர்க் என்ற வகையில், எங்களால் அதிவேக இன்டர்நெட் சேவையை தர முடியும் என்ற காரணத்தினால், பல்வேறு சோதனைகளுக்கு பிறகே இந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.