தமிழகத்தில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால் 5 ஆண்டுகள் சிறை .?

Published:

 மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை குஜராத், மராட்டிய மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் காற்றாடியால் 2 சக்கர வாகனங்களில் செல்வோர், மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு மாண்டுபோகிறார்கள். சமீபத்தில் சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 5 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுபோன்ற காற்றாடியால் உயிர் இழப்பு சம்பவங்கள் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அடிக்கடி நடக்கிறது.

சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்ற என்ஜினீயர் ஒருவர் காற்றாடி மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு மாண்டார். எழும்பூரில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வயது சிறுமி உயிர் இழந்தாள். சைதாப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மேடை பாடகி ஒருவர் பேசும் சக்தியை இழந்தார். இப்படி மாஞ்சா நூலால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வடசென்னையில் அதிக உயிர் இழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தற்போது போலீசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் தமிழகத்தில் இல்லை. மத்திய அரசு 1986-ம் ஆண்டு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரம் கொடுப்பதாக உள்ளது. இந்த சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த சட்டம் அமலில் உள்ளது. அங்கு காற்றாடி விடுவதால் கழுத்து அறுபட்டு பறவைகள் மாண்டுபோகின்றன. இதை தடுக்க இந்த சட்டத்தை பயன்படுத்தி போலீசார் அந்த மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலோ குறிப்பாக சென்னையிலோ காற்றாடியால் மனிதர்கள் மாண்டுபோகிறார்கள். எனவே மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் கொண்டுவந்து காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தலாமா? என்பது குறித்து அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனவே காற்றாடியால் ஏற்படும் விலை மதிக்க முடியாத மனித உயிர் இழப்புகளை தடுக்க தாமதிக்காமல் தமிழக அரசு இந்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

பட்டம் விடுபவர்களுக்கு அது விளையாட்டு. ஆனால் அதனால் விலை மதிக்க முடியாத உயிர் இழப்பு ஏற்படுகிறதே. இதற்கு யார் பொறுப்பு. யாரை தண்டிப்பது. மறைமுகமாக இது கொலைக்கு சமமானது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விடுபவர்களை கோர்ட்டில் நிறுத்தி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அனுபவிக்க வகை செய்கிறது. காற்றாடி பறக்கவிடுபவர்களை கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் கொடுக்கிறது.குஜராத், மராட்டிய மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img