த.மா.கா. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்றும், தமிழகம் முழுவதும் தான் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக எங்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகிறோம். விரைவில் கவர்னரை சந்தித்து ஒரு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துகளை சமர்ப்பிப்போம். மக்களின் எண்ணங்களுக்கேற்ப தமிழக அரசு முடிவுகளை எடுக்க வேண்டும்.
இலங்கைக்கு ஆதரவான நீர்த்து போன தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்ததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அந்த வகையில் அந்த கட்சிகள் போராடி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் நான் மக்களை சந்தித்து வருகிறேன். அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன். அந்தவகையில் நாங்கள் முதலிலேயே பிரசாரத்தை தொடங்கி விட்டோம். 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி பிப்ரவரியில் நிறைவு செய்வோம்.
பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மக்கள் விரும்பும் கூட்டணியில் இருப்போம். மக்கள் பரபரப்பான அரசியலை விரும்புகிறார்களா? இயல்பான அரசியலை விரும்புகிறார்களா? என்பது அவர்களின் முடிவுக்கு பிறகு தான் தெரியும்.நெல் குவிண்டாலுக்கு ரூ.2,175 வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


