பீகாரின் கைமுர் பகுதியில் இன்று(அக்.,12) நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு முறை பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தும், அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று(அக்., 12) நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தலுக்கான, பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை கைமூர் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைமுர் பகுதி வெகு காலமாக ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதியாக விளங்குகிறது. மாவோயிஸ்ட் பாதிப்புக்கு உள்ளான இப்பகுதியில் மோடியின் பிரசாரத்தை நடத்த பா.ஜ., அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளிக்க மாவட்ட நீதிபதி துவேஷ் ஷெக்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஷெக்ரா, மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். கைமூர் மாயிஸ்ட் பாதிப்பு நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமரின் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க முடியாது என ஷெக்ரா திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால், 30,000 பேருக்கு மேல் கூட்டம் கூட்ட மாட்டோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து விட்டோம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கூறி பா.ஜ., மீண்டும் அனுமதி கேட்டது. தொடர்ந்து 2வது முறையாக கேட்டும், அனுமதி தர முடியாது என கூறிவிட்டார்.
பிரதமரின் கூட்டத்திற்கு அனுமதி அளிக்காததற்கு பீகார் அரசின் அழுத்தமே காரணம் என பா.ஜ., மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் அனுமதி அளித்த பிறகும் கூட மாவட்ட நீதிபதி அனுமதி அளிக்க மறுக்கிறார். இதனால் பிரதமரின் கூட்டத்திற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில், பீகார் மூத்த தேர்தல் அதிகாரி அஜய் வி நாயக்கிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


