சென்னை:
தாத்ரி படுகொலைச் சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொறுப்பாளருமான பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
திங்கள்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது…
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சொல்வதற்கு மாறாக, இங்கு உள்ளவர்கள் மதமாற்றத்தில் தொடங்கி, மாட்டுக்கறி வரை அரசியல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மோடி கண்டுகொள்வது இல்லை.
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், மத ரீதியாக பகைமை பாராட்டுபவர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் பிகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி கூறினார். ஆனால், தாத்ரி படுகொலைச் சம்பவம் தொடர்பாக அவர எதுவும் கண்டித்துப் பேசவில்லை. அந்தச் சம்பவம் நடந்தபோது அமெரிக்காவில் இருந்த அவர், அங்கிருந்தே கண்டித்திருக்க முடியாதா? கண்டித்துவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால், அது பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறினார்.


