புது தில்லி:
தில்லியில் உள்ள கேரள இல்லத்தின் உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு தில்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின் விருந்தினர் இல்லமான கேரள இல்லம் உள்ளது. இங்குள்ள உணவகத்தில் வெளி ஆட்களும் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படுவதாக தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை புகார் வந்தது. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்.
தில்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரள இல்லம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்பட்டதாக வெளியான தகவலை கேரள அரசு நேற்று திட்டவட்டமாக மறுத்தது.
கோழிக்கோட்டில் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள இல்லம் தனியார் ஹோட்டல் அல்ல. லாப நோக்கத்துடன் நடத்தும் நிறுவன மும் அல்ல. இது மாநில அரசின் விருந்தினர் இல்லம். இங்கு போலீஸ் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. சோதனை நடத்தும் முன்பு தில்லி போலீஸார் சற்று நிதானத்தை கையாண்டிருக்கலாம். உள் துறை அமைச்சகத்திடம் தகவல்களை பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். மாட்டிறைச்சி தடை தொடர்பாக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்” என்றார்.
இதுதொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாமஸ் நேற்று தில்லி யில் கூறும்போது, “கேரள இல்லத்தின் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமை இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் மாட்டிறைச்சி என்று கூறப்பட்டுள்ளது.
கேரள இல்லத்தில் உள்துறை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி தில்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். தில்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். என்றாலும் நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார்.
பிரதமருக்கு கடிதம்:
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “கேரள இல்லத்தின் உணவகத்தில் தில்லி போலீஸார் சோதனை நடத்தியது மிகவும் ஆட்சேபனைக்குரியது. அவர்கள் அதிகார வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். தவறான தகவலின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் அனுமதி பெறாமல், அல்லது முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கேஜ்ரிவால் கண்டனம்:
சோதனை நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “கேரள இல்லத்தில் தில்லி போலீஸார் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. கேரள இல்லம் ஓர் அரசுக்குச் சொந்தமானது. தில்லி போலீஸ் கேரள இல்லத்துக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். பாஜக தொண்டர்களைப் போல தில்லி போலீஸ் நடந்துகொள்கிறது” என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, மார்க்சிஸ்ட் தலைவர் பினரயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தில்லி காவல்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


