ஆசிட் வீசி காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைசேர்ந்தவர் ஜெயசீலன். அவருடைய மகள் ஸ்ரீவித்யா.அப்பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் வித்யா வேலைக்கு சேர்ந்தார்.அந்த கம்ப்யூட்டர் மையத்துக்கு, கிண்டி நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் அங்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் விஜயபாஸ்கரினின் பெற்றோர், தங்கையின் திருமணம் முடிந்த பிறகு உன்னுடைய திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர்.
விஜயபாஸ்கர், வித்யா வேலை பார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வெளியே வருமாறு வற்புறுத்தியுள்ளார்
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி மதியம் விஜயபாஸ்கர் கம்ப்யூட்டர் மையத்துக்கு சென்று வித்யாவை வெளியே வருமாறு கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் அங்கிருந்து கோபத்துடன் சென்றார்.
பின்னர், சிறிது நேரத்தில் கையில் ஆசிட் பாட்டிலுடன் அங்கு வந்த விஜயபாஸ்கர், எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கையில் வைத்திருந்த ஆசிட்டை வித்யாவின் முகத்தில் வீசினார்.
பலத்த காயமடைந்த வித்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் மெட்ரோ பாலிடன் 7 ஆவது நீதிமன்ற நீதிபதியிடம் வித்யா வாக்குமூலம் அளித்தார்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யா 20-02-2013 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, விஜயபாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், ஆசிட் வீசி கொலை செய்த குற்றத்திற்காக விஜயபாஸ்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராத தொகை கட்ட வேண்டும் என்றும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்


