திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வெகு நாட்களாக மாநகர காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இதையடுத்து மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில் சாமி தலைமையில் இரவு நேரங்களில் வாகனங்களில் மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? மேலும் வேறு எங்காவது பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா? என்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் மயில்சாமி தலைமையில் போலீசார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டவர்த் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சோமரசம் பேட்டை சீரா தோப்பு பகுதியை சேர்ந்த சிவசங்கரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் மறைத்து வைத்து மது பாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் உள்ள ஒரு அறையில் தீபாவளி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 750 மி.லி கொள்ளளவு கொண்ட 600 கர்நாடக மாநில மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த அருள்முருகன், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி காவல்துறையினர் வருகிறார்கள்.
“


