ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து பர்த்வான் நோக்கி ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் மித்தாபுக்கூர் பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நேற்று பிற்பகல் தனது தாயாருடன் பயணம் செய்தார்.
உட்கார சீட் கிடைக்காததால் அந்த மாணவி ஓரிடத்திலும், தாயார் மற்றொரு இடத்திலும் உட்கார்ந்து கொண்டனர். இந்நிலையில் அந்த சிறுமி அசந்து உறங்கி விட்டாள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தூக்கம் கலைந்து எழுந்த மாணவி, பயத்தில் அலறி கூச்சலிட்டாள்.சிறுமியின் அலறல் கேட்ட தாயாரும், மற்ற பயணிகளும் அந்த காம கொடூரனுக்கு தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பினாய் தாஸ் என்றும் மேமாரி பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.தலைமையாசிரியர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


