ஈரோடு மாவட்டத்தில் 17 வயது மைனர் பெண்ணை கடத்தி மைசூரில் திருமணம் செய்துகொண்டவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அருகே உள்ள சென்னிமலை பகுதியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சுரேஷ்(23). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை கடத்திச் சென்று மைசூரில் திருமணம் செய்துள்ளார்.
அதன் பின்னர், வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிவந்து அங்கு அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த சுரேஷை கைது செய்ய வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வேலூருக்கு சென்று அவரை கைதுசெய்த காவல் துறையினர், அந்தப் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ் மீது ஆள்கடத்தல் மற்றும் மைனர் பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்தது, சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தநிலையில் அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி திருநாவுக்கரசு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் மற்றும் மைனர் பெண்ணை திருமணம் செய்தமைக்காக 2 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் இந்த ஆயுள் தண்டனையுடன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.


