அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று பாடகர் கோவன் கைது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை திருச்சியில் இன்று (நேற்று) அதிகாலை 2.30 மணியளவில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளை எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அ.தி.மு.க. அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.



