திருச்சி மாவட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்புஅவரது வீட்டில் அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மக்களுக்கான விழிப்புணர்வு பாடல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்களை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் கொடைக்கானலில் உள்ள வன விலங்கு சரணாலயத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள பழங்குடியினரை இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியதால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவன் பாடிய பாடல்கள் மக்களை போராடுவதற்க்கு தூண்டிவிடுவதாக கூறி அவர் மீது நேற்று இரண்டு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் மதுகடைகளை இழுத்து மூட வலியுறுத்துவது குற்றமா? என்று தமிழக அரசிற்க்கு கேள்வி எழுப்பியுள்ளனர்
இந்த நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு முறைப்படி கோட்டை காவல்நிலையத்தில் அனுமதி பெற்று இருந்தனர்.
ஆனால் இன்று காலை காவல்துறையினர் தீடீர் என ஆர்பாட்டம் நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்தனர்.ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருக்கும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் காவல்துறையினர் அவர்களுக்கு ஒலி பெருக்கிகளை வைக்க அனுமதி அளிக்காததால் தங்களுடைய போராட்டத்தை தீவிர படுத்திய போராட்டகாரர்கள் போராட்டம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர்
ஆர்பாட்டகாரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 92 பேரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏன் ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தீர்கள் என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி அனுமதி மறுப்பு
மற்றும் தாக்குதலை கண்டித்து திருமண மண்டபத்தில்உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் கோட்டை காவல்நிலைய அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு உள்ளனர்.
பாடகர் கோவன் கைது செய்ததை கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை காவல்துறையினரிடம் வைத்து கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்திலே உண்ணாநிலையில் போராட்டகாரர்கள் இருந்து வருவதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


