
நாமக்கல்:
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி வித்தை காட்டும் ஒருவர் “நமக்கு நாமமே” என்பதை உணர வேண்டும் என்று பிரேமலதா, திமுக., பொருளாளர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
“நான் யாரையும் குறை கூறி ஓட்டு கேட்கவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக தேமுதிக.,வுக்கு வாக்களிக்கச் சொல்கிறேன். தமிழகத்தில் ஒருவர் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கிறேன் என்று சைக்கிள் ஓட்டி வித்தை காட்டுகிறார். ஆனால் நமக்கு நாமமே என்பதை அவர் உணர வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது டைரியில் போலிஸ் துணை சூப்பிரண்டு என்றால் டம்மி என்று எழுதி வைத்திருக்கிறார். இதிலிருந்தே அவர் எந்தளவுக்கு மேல்அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று மக்கள் யோசிக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்று கூறினார்.


