
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கபட்டுள்ள சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்று ஒரு வாரத்தில் பதில் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை முன்பு காமராஜர் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைத்த பிறகே சிவாஜி சிலையை அகற்ற முடியும் என்றும், அதற்கு பல துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்திருந்தது. எனவே, சிவாஜி சிலையை அகற்றுவதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தேவைப்படுவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது.
மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக நெடுஞ்சாலை துறை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் மீதுள்ள அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


