
சென்னை:
தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் டி. ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தன்னை மனுதாரராக சேர்க்கக் கோரி விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், அவரது மனுவை கடந்த ஜூலை 22-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, விஜயகாந்த் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கிறோம். அதனால் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.
இதையடுத்து விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இன்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், பேரவை நிகழ்வுகளை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என்றும், தாம் பங்குதாரராக உள்ள கேப்டன் டி.வி.யில் அதை ஒளிப்பரப்பத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


