நெல்லை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை பொது இ-சேவை மையத்தில் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். அப்போது எந்தெந்த சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளது. யாரிடம் நிலுவையில் உள்ளது என்பது போன்ற நிலை குறித்து கேட்டறிந்தார். இதுதொடர்பாக இ-சேவை மைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு தாசில்தாரை கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கருணாகரன் கூறியது, நெல்லை மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 25 பேருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. மையங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
இதன்பின்னர் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் கருணாகரன், ரெட்டியார்பட்டி, முன்னீர்பள்ளம், தருவை, மைலாக்களம், ஆலங்குளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டார். அப்போது ஆட்சியருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் விஜயகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திகேயன், பாளையங்கோட்டை தாசில்தார் கிறிஸ்டாேபர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா ஆகியோர் உடன் சென்றனர்.


