கற்பழிப்புக்கு ஆளான அந்தப் பெண் இரவு நேரத்தில் ஏன் கப்பன் பூங்காவுக்கு வந்தார்? என்று கேள்வி எழுப்பிய கர்நாடக மாநில அமைச்சர் பரமேஸ்வருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், கப்பன் பூங்காவில் 30 வயதுமிக்க பெண் பாதுகாவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கப்பன் பூங்கா அருகில் டென்னிஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த டென்னிஸ் கிளப்பில் உறுப்பினர் ஆவதற்காக நேற்று முன்தினம் மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றுள்ளார். கிளப்பின் நேரம் முடிவடைந்ததால் அந்தப் பெண்ணை மறுநாள் வரும்படி கிளப் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அந்தப் பெண் வந்திருந்ததால், பெங்களூரில் தங்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அருகில் உள்ள கப்பன் பூங்காவிற்கு சென்ற அந்தப் பெண் இரவு 9.30 மணி வரை அங்கு இருந்துள்ளார்.
அப்போது அங்கே தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம், அந்தப் பூங்காவின் காவலர்கள் இருவர் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, பூங்காவில் இருந்து வெளியே செல்வதற்கு அந்தப் பெண் வழி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவலர்கள் இருவரும் அந்தப் பெண்ணை, வழி காட்டுவதாக கூறி மரங்கள் அடர்ந்த இடத்திற்கு அழைத்து சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நள்ளிரவு 2 மணியளவில் கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பெங்களூரூ கப்பன் பூங்காவின் காவலர்கள் இருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கப்பன் பூங்கா போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இரு காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
பெங்களூரு கப்பன் பூங்காவில் வைத்து ஒரு பெண்ணை 2 காவலாளிகள் கற்பழித்து உள்ளனர். அந்த காவலாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்திருக்க கூடாது. அந்த பெண் டென்னிஸ் விளையாட வேண்டும் என்று கூறி, இரவு 9.30 மணியளவில் கப்பன் பூங்காவுக்கு வந்துள்ளார்.
இரவு 9.30 மணியளவில் ஒரு பெண் கப்பன் பூங்காவுக்கு வந்தது ஏன்? என்பது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. என அம்மாநில அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
இந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் டென்னிஸ் விளையாட வேண்டும் என்று கப்பன் பூங்காவுக்கு அந்த பெண் வந்தது குறித்து பிரச்சனையாக இருக்கிறது என்று அம்மாநில பரமேஸ்வர் கூறியதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானலும் சுதந்திரமாக வெளியே வரலாம். இரவு 9.30 மணிக்கு கப்பன் பூங்காவுக்கு வந்தது குறித்து அமைச்சர் பரமேஸ்வர் பேசியது கண்டனத்திற்குரியது என்று மகளிர் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, கர்நாடக பா.ஜனதா மேல்–சபை உறுப்பினரும், நடிகையுமான தாரா கூறுகையில், “பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கு நகைகள் அணிந்தபடி தனியாக சென்றுவிட்டு வீட்டிற்கு பத்திரமாக திரும்பி வந்ததால்தான் நாம் முழு சுதந்திரம் அடைந்து இருக்கிறோம் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், ஒரு பெண் இரவு 9.30 மணியளவில் கப்பன் பூங்காவில் நின்றது பிரச்சனையாக இருக்கிறது என்று அமைச்சர் பரமேஸ்வர் பேசி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
பெங்களூர் உள்பட மாநிலத்தில் பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு வருகிறார்கள். இது கர்நாடக அரசு மற்றும் காவல்துறை தோல்வி அடைந்திருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இரவு 9.30 மணியளவில் கப்பன் பூங்காவுக்கு செல்வது தவறு என்றால், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியது தான். கர்நாடகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை,“ என்கிறார்.
பெங்களூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடந்த மூன்றாவது பாலியல் பலாத்கார சம்பவம் இது. முன்னதாக, கால்சென்டரில் வேலை செய்துவரும் 22 வயது இளம்பெண் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது


