ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17), தேர்வில் தோல்வி அடைந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான்.
நன்கு படிக்கும் மாணவனான ஹிலால், இயற்பியல் பாடத்தில் வெறும் 28 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்து கவலை அடைந்து ஆற்றில் விழுந்து கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டான்.
ஹிலாலின் முடிவால் கவலையில் ஆழ்ந்த அவரது தந்தை, மறுகூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்தார். இயற்பியல் விடைத்தாளை மறுகூட்டல் செய்தபோது, அதில் 48 மதிப்பெண்கள் அதாவது 70 சதவிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹிலாலின் தந்தை, விடைத்தாளை அலட்சிய போக்காக திருத்திய ஆசிரியர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


