தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்துவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திடீரென சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரையும் விஜயகாந்த் கோபத்தில் உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்திற்கு வந்த விஜயகாந்த் மழை பெய்ய ஆரம்பிக்கவே அவசர அவசரமாக நிவாரண பணிகளை முடித்துவிட்டு தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ஏறினார். அப்போது மாவட்ட செயலாளரும், பண்ருட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான சிவகொழுந்து விஜயகாந்த் பின்னாலேயே அதே வாகனத்தில் ஏறப்போனார்.
இதில் கடுப்பாகிப்போன விஜயகாந்த் சிவகொழுந்து தலையில் பளீர்…. பளீர்… என்று நான்கு வைத்துவிட்டு, நாக்கை நாக்கை கடித்துக்கொண்டு அதன்பின் கோபம் குறையாத அவர், ”சீக்கிரம் வண்டியை எடுடா” என்று வாகனத்தி ல்இருந்த ஓட்டுனரை காலால் உதைத்ததும் வேன் விர் என்று கிளம்பியது. இதைப்பார்த்த கட்சிக்காரர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
விஜயகாந்த்திடம் சிவகொழுந்து அடி வாங்கியிருப்பதால் அடுத்து அண்ணனுக்கு அமைச்சராகும் யோகம் இருக்கிறது என்று சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிவகொழுந்தின் ஆதரவாளர்கள் பரவலாக பேசினர்.
பொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான். அதேபோல் செய்தியாளர்களிடமும் பாயக் கூடியவர்..
இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.
இந்நிலையில் மீண்டும் கோபத்துடன் சட்ட மன்ற உறுப்பினரை விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


