தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளில் மிக முக்கியமானது காவல்துறை.
அவரது ஆட்சியில் மட்டுமே காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது என்கிற நிலை உள்ளது.
ஆனால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு விரோதமாக அத்துமீறி நடந்து கொண்டால் அவர்கள்மீது மட்டும் தமிழக காவல் துறையில் பணியாற்றுபவர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் எனும் கேள்வியைத்தான் பெரும்பாலோர் எழுப்புகின்றனர்.
அந்த கேள்வியை பெரும்பாலோர் எழுப்புவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் என்ற போர்வையில் காவல் துறையினரிடம்
அனுமதி பெறாமல் திடீர்.. திடீர்..என பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், என கூறிக்கொண்டு சாலை மறியலில் ஈடுபடுவது தான்.
அவசரமான பொது பிரச்னைகளுக்காக எவரேனும் அனுமதி பெறாமல் சாலை மறியல் போன்ற பலவிதமான சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கூட உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினர் வழக்கறிஞர்களைக் கண்டால் பயந்து பதுங்குவது ஏன்? என்பதிற்கு விடை தெரியாமலே பலர் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் திருநங்கைளைக் கண்டாலே அவர்களை ஏளனமாகப் பேசுவோர் பெரும்பாலாேனார் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து காவலருக்கும் திருநங்கை ஒருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
அப்போதுகூட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பாலினம் என்றும் பாராமல் காவல் துறையினர் அந்த பிரச்னையில் உடனடியாக திருநங்கையை கைது செய்து நடவடிக்கை எடுத்தது அனைவரும் அறிந்ததே!
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை காவல் நிலையத்திற்குள் நேற்று (14.11.2015) காலை சுமார் 11.00 மணிக்கு ரௌடிபோல் தோற்றம் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் சிலரை உடன் கூட்டிக் கொண்டு கும்பலாக சென்றாராம்.
அந்த வழக்கறிஞர் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் இல்லாத நிலையில் பணியில் இருந்த பெண் காவலரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தாராம். மேலும் புகார் கொடுத்தவுடன் அவரிடம் உடனடியாக மனு ரசீதை வழக்கறிஞர் கேட்டதாகவும் தெரிகிறது.
புகாரை பெற்றுக் கொண்ட பெண் காவலர் புகார்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசியை எடுத்தாராம்.
அதனால் ஆத்திரம் அடைந்த கும்பலுடன் சென்று புகார் கொடுத்த வழக்கறிஞர் “புகார் அளிக்க வந்த எனக்கு உடனடியாக மனு ரசீதை கொடுக்காமல் எவன்கூட கடலைபோட தொலைபேசியில் பேச எவனடி கூப்புடறே” என்று அதிகாரத் தோரணயுடன் உரத்த குரலில் பெண் காவலரை மிரட்டி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டி அவரை பணியாற்ற விடாமல் கும்பலாக சென்ற அனைவரும் தடுத்தனராம்.
காவல் நிலையத்தில் கும்பலாக சத்தம் போடுவதைக் கேட்ட ஆயுதப்படை இளம் காவலர் ஒருவர் வழக்கறிஞரிடம் “சார் உங்களுக்கு என்ன பிரச்னை? எதுவாக இருந்தாலும் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசிக் கொள்ளுங்கள். ஆய்வாளர் விரைவில் காவல் நிலையத்திற்கு வந்து விடுவார். தேவையில்லாத அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி யாரையும் பேச வேண்டாம். பொறுமையை கடைப்பிடித்து சிறிது நேரம் உக்காருங்கள்” எனக் கூறினாராம்.
அதற்கு வழக்கறிஞருடன் வந்திருந்த கூட்டம் “நீ யாருடா” என நாம் பதிவிடக் கூசும் ஒரு வார்த்தையைக் கூறி “எங்க சீனியர்கிட்ட பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு?” என்றும் வாய்க்கு வந்த தகாத வார்த்தைகளால் பேசி காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் கும்பம் கடும் வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை மற்றொரு பெண் காவலர் அவரது கைப்பேசியில் காணொளி பதிவு செய்தாராம். அதை பார்த்துவிட்ட அந்த கூட்டம் அந்த பெண் காவலரை விரட்டிப் பிடிக்க முயல பெண் காவலர் காவல் நிலையத்திற்குள் இருந்த ஒரு அறைக்குள் ஓடிவிட்டாராம்.
வழக்கறிஞர் உட்பட அவருடன் வந்த கும்பலில் சிலர் ஓடிய பெண் காவலர் இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண் காவலரிடம் “நீ விபச்சாரிக்கு பிறந்தவளா? அதற்குத்தா்ன் நீயும் பிறந்தாயா? என்கூட வர்றியா? நான் பணம் தர்றேன்” என தாறுமாறான வார்த்தைகளால் திட்டத் தொடங்கியதாம் அந்த கும்பல். அப்போது அங்கு வந்த ஒரு வயதான உதவி ஆய்வாளர் அந்த கும்பலைத் தடுத்து நிறுத்தினாராம்.
உதவி ஆய்வாளரிடம் கும்பல் பெண் காவலர் செய்த காணொளி பதிவை நீங்க இப்போ அழிக்காவிடில் காவல் நிலையத்தின் முன் 100 வழக்கறிஞர்களை இப்போதே கூட்டி பிரச்னை செய்து விடுவோம் என மிரட்டினார்களாம்.
உடனே அந்த உதவி ஆய்வாளர் அப்பெண் காவலரிடம் அந்த கைப்பேசியை வங்கி அந்த கும்பலிடம் கொடுத்து “நீங்களே காணொளி பதிவை அழித்து விடுங்கள்” எனக் கூற அந்த கும்பல் காணொளியை அழித்து விட்டதாம்.
மேலும் அப்பகுதியினர் கூட்டமாக கூடியநிலையில் வழக்கறிஞர் கும்பலாக காவல் நிலைய நுழைவாயிலில் நின்று அந்த ஆயுதபடைக் காவலரைப் பார்த்து “உன் வேலையை ஆஷாத் நகரோட வச்சுக்கோ. இங்க வந்தா நான் 1000 இந்துக்களை இங்கேயே கூட்டவா?” என அவரது மதத்தினைக் கூறி திட்டி மிரட்டி விட்டு சென்று விட்டதாக அப்பகுதியினரால் பரவலாகப் பேசப்படுகிறது.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்ககே இந்த நிலைமை எனில் சாமானியனின் கதி என்ன? அதோகதிதானே?
நீதிமன்றத்திற்குள் மட்டுமே தொழில் செய்ய வேண்டிய வழக்கறிஞர்கள் பலர் காவல் நிலையத்திற்கு வந்து காட்டுமிராண்டித்தனமாக அநாகரிகமாக பேசி கட்டப்பஞ்சாயத்து செய்வது ஏனோ?
சில வழக்கறிஞர் காவல் நிலையத்திற்குள் கும்பலாகப் புகுந்து காவல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிக துணிச்சலுடன் காவலர்களுக்கே மிரட்டல் விடுக்கிறார் என்றால் காவல் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கும் சில வழக்கறிஞர்களுக்கும் என்ன உள்குத்தோ?
வழக்கறிஞர்களை கட்டப் பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு அனுமதிப்பது யார் குற்றம்?
காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது என்கிற நிலையை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சில வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து செய்யும் கட்டப் பஞ்சாயத்து மற்றும் அட்டகாசத்தை ஒழிக்க முடியுமா என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


