தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; உங்களுடன் நான் துணை நிற்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆறுதல் கூறியுள்ளார்.
சென்னையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் அவர் பொதுமக்களிடம் பேசுகையில், வடகிழக்குப் பருவ மழை துவங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினேன். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
எனினும், 3 மாத காலமாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழை நீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது.
இருந்தாலும், பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். என்றும் உங்களுடன் நான் துணை நிற்கிறேன், தமிழக அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார்.


