கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வெள்ளத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியது.
கனமழை காரணமாகவும், ஸ்ரீபெரும்புதூர், நேமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் வரத்தாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி. ஏரியில் நேற்று காலையில் நீர்மட்டம் 21 அடியை எட்டியது.
இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, மொத்தம் உள்ள 5 மதகுகளில் 3-வது மற்றும் 4-வது மதகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்தனர். வினாடிக்கு சுமார் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. என்றாலும் நீர் வரத்து அதிகரித்ததால் சிறிது நேரத்தில் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனால் மேலும் 3 மதகுகள் திறக்கப்பட்டன. இதன்மூலம், ஏரியில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஏரிக்கு வந்து மதகுகளின் வழியாக வெளியே சென்ற நீரின் அளவை பார்வையிட்டார். அத்துடன், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சிறுகளத்தூர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த இடத்தில் சாலை மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும் மற்றும் நந்தம்பாக்கம், பெரியார் நகர், சோமங்கலம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தகவல் அறிந்தவுடன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை ஆர்வமுடன் பார்த்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஏரி நிரம்பி இருப்பதை பார்க்க ஏராளமான பேர் வருவதால் ஏரிக்கரையின் மீது தற்காலிகமாக கடைகள் முளைத்து உள்ளன.
குன்றத்தூரில் இருந்து சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் மதகுகள் வழியாக செல்ல தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், 3 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் இருப்பு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது இந்த ஏரியில் 1,150 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 443 மில்லியன் கன அடி உள்ளது. மழையின் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் நீர் வரத்து அதிகமாக உள்ளது.
ஆவடியை அடுத்த மிட்டனமல்லி, கோவில்பதாகை ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பாலவேடு ஏரியில் நேற்று காலை 8.30 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் சுற்றியுள்ள மிட்டனமல்லி, கோவில்பதாகை, பிருந்தாவன் நகர், ராஜீவ்காந்தி நகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுமார் 200 வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பால்வாடியிலும், தேவாலயத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு உணவும் தமிழக அரசால் வழங்கப்பட்டுகிறது.


