இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தினமும் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்னை செல்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருவாயூரில் இருந்து தென் மாவட்டங்கள் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண் 16128) தினமும் குருவாயூரில் இரவு 9.25 மணிக்கு புறப்படும். ஆனால், இன்றுமுதல் வரும் ஜூலை 23ம் தேதி வரை இந்த ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது தினமும் 2 மணி நேரம் தாமதமாக அந்த ரயில் குருவாயூரில் இரவு 11.25 மணிக்கு புறப்படும்.
இதில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் மட்டும் விதிவிலக்கு ஆகும். இவ்விரு தினங்களிலும் வழக்கம்போல் இரவு 9.25 மணிக்கே புறப்படும். குருவாயூர் ரயிலுக்கு இணைப்பு ரயிலான தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இணைப்பு ரயில் (எண் 16130) தூத்துக்குடியில் காலை 7.50 மணிக்கு புறப்படும். இன்று துவங்கி ஜூலை 23ம் தேதி வரை 2 மணி நேரம் தாமதமாக காலை 9.50 மணிக்கு தூத்துக்குடியில் புறப்படும். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் விதிவிலக்காகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



