தமிழகத்தில், ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :–
தமிழகத்தின் தலைநகரான சென்னையை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவோம் என கடந்த, கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அதிகார பீடத்தை அலங்கரித்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் வாய் கூசாமல் வசீகரமான வார்த்தைகளில் வாக்குறுதிகளை வழங்கின. ஆனால், சாதாரணமாக 5 நாட்கள் பெய்த மழையைக் கூட தாங்க முடியாத அளவு சென்னையும் தத்தளிக்கிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் விளைந்த கடும் சேதங்களை கண்ட பின்பும் கடந்த 10 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முறையாக மழைநீரை சேகரிக்கவும், பழுதடைந்த கால்வாய்களை சீரமைக்கவும், நீர்நிலைகளை தூர்வாரவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர் நிலைகளில் பெரும்பாலானவைகளை திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளின் ஆட்சி காலங்களில் தான் பலரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. தண்ணீர் தேங்கும் தாழ்வான இடம் எல்லாம் மாடிவீடுகளாக மாறியது.
தமிழகத்தில் பாயும் 17 சிறிய, பெரிய ஆறுகள் ஒன்றிணைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டம் இன்று வரை முழுமைப் பெறவில்லை.
தமிழக அரசின் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால், ஒவ்வொரு வருடமும் குறைந்தது 177 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்த முடியாமல் வீணாகப் போகிறது.
வெள்ள நிவாரண பணிகளால் மட்டும் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடாது.இது புதிய இலவச திட்டங்களை அறிவிக்க உதவும்.
ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும்.
ஆயிரம் தவறுகள் இருந்த போதிலும் அரசியல் கருத்து வேற்றுமைகளை மீறி, நிவாரண பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபடுவது தான் இன்றைய அவசர தேவையாகும் என தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


