ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாகினர்.
வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டு இருந்தது. இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக ஆந்திராவில் நெல்லூர், சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
சில இடங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள் போடப்பட்டன. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் 14 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன நெல்லூர், கடப்பா, திருப்பதி நகரங்களில் பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. நூற்றுக்கும் அதிகமான குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளைநிலைங்களில் தண்ணீர் புகுந்தது. சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் மழைக்கு 5 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடப்பாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாகினர்.


