தமிழகத்தில் தற்போது எந்த புயலுக்கும் வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மக்களுக்கு இப்போது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு வாரமாக கனத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பிரச்னையை ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் தாக்கும் என்ற தகவல் வெளியானது. இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியபோது “புயலுக்கு வாய்ப்பில்லை என்றாலும், மேலடுக்கு சுழற்சி காணப் படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கோவை, நீலகிரி போன்ற உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
தமிழகத்துக்கு அடுத்து புயல் தாக்கும் ஆபத்தில்லை என்ற தகவல், மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது.


