சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைந்ததும், பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாடப் படும் மே 3 ஆம் தேதி நேற்று, மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் பக்கத்தில் பதிவு செய்த கருத்து: சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமான மே 3 ஆம் தேதி ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை மிளிர வைத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அவர்களின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தி வருகிறோம். அரசியலும், அரசியல் நடவடிக்கைகளிலும் உள்ள குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டும் பத்திரிக்கைகளின் பணி மிக முக்கியமானது என்பது மட்டுமின்றி அதை எதைக் கொண்டும் அளவிட முடியாது. மக்கள் தங்களுக்குத் தேவையான, சரியான, உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு வழிகாட்டியாக இருப்பதே பத்திரிக்கைகளின் மிகப் பெரிய பொறுப்பு. பத்திரிகையாளர்களின் மீது திமுக மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த வகையில், திமுக எப்போதும் பத்திரிக்கையாளர்களின் மீது அன்பு செலுத்தி நம்பிக்கையும் கொண்டிருக்கிறது. அவர்களின் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்திருக்கிறது. அவர்கள் சொல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நெருக்கடி நேரங்களில் எல்லாம் மதித்து நடந்திருக்கிறது. சாதாரண மக்கள் விரும்பும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் உருவாக்குவதில் பத்திரிகைகள் முக்கியப் பணியாற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் கருதித்தான் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் “அரசியல் சட்டப்பிரிவு 19 ல் வழங்கியுள்ள ஆறு சுதந்திரங்களில் ஒன்றாக பத்திரிகைச் சுதந்திரத்தையும் சேர்த்திருக்கிறார்கள்” என்பதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். இப்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் நூற்றுக் கணக்கானமான மான நஷ்ட வழக்குகளைப் பதிவு செய்து பத்திரிகையாளர்களையும், பத்திரிகை நிறுவனங்களையும் மிரட்டிக்கொண்டுள்ளது. இவைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில், வரும் 2016 ஆம் வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்த மானநஷ்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, பத்திரிகைகளின் சுதந்திரம் மீட்கப்படும் நல்ல நிலை உருவாகும் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்.
சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை மிளிர வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்களு… Posted by M. K. Stalin on Sunday, May 3, 2015