திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என தகவல் வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
இந்நிலையில் கலைஞரின் நலம் விசாரிக்க வரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கலைஞர் உடனான நிகழ்வுகளையும், அவரது புகழ் பாடியும், மீண்டும் கலைஞர் கை அசைக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேட்டியின் போது கலைஞரை பற்றி கூறிய ஒரு பதில் தான் தற்போது வைரலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒரு பேட்டியின் போது. ‘கருணாநிதி காலத்திற்கு பிறகான உங்கள் அரசியல் பற்றி’ என்றதற்கு…..
‘அரசியலை விட்டு ஒதுங்கி விடுவேன்’ – என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா…
‘ஏன்?’ என்று பத்திரிக்கையாளர் ஆச்சர்யத்துடன் கேட்டதற்கு..
‘அவரை எதிர்த்து அரசியல் செய்யவே, நான் விரும்பாத இந்த அரசியலுக்கு வந்தேன். அவர் காலத்துக்குப் பிறகு யாரை தகுதியான எதிரியாக நினைத்து அரசியல் செய்ய முடியும்’ என்றாராம் ஜெயாலலிதா சிரித்தபடியே…!
அவர் மரணித்த போது இவர் மௌனித்தாரா..? அல்லது இவர் மெளனித்த போது அவர் மரணித்தாரா..?
ஒரு மரணமும்… ஒரு மெளனமும் தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பு…!
-இவ்வாறு வெளியான இந்தப் பதிவு திமுக., மற்றும் அதிமுக தொண்டர்களை நெகிழ வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், திமுக அதிமுக., என்றாலே எதிரெதிர் முனையாக பார்க்கப்படும் ஒரு பார்வை…
இன்று அதிமுக அமைச்சர்கள் அனைவரும் திமுக குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதை பார்க்கும் போது.. ஒன்றிணைந்த காட்சியாக மாறி உள்ளது என பலரும் ஆச்சயப் படுகின்றனர்.



