சென்னை: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கணிசமான ரசிகர்கள் பெருகியுள்ளனர். நடிகரும் அரசியல்வாதி ஆகிவிட்டவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். தற்போது இரண்டாவது சீஸனில் ரித்விகா வெற்றி பெற்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், கடந்த ஜூன் 17ம் தேதி துவங்கியது. ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், யாஷிகா, மும்தாஜ், பாலாஜி, சென்ட்ராயன், பொன்னம்பலம், மகத், டேனியல், ஷாரிக், அனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி, ரம்யா, மமதி, நித்யா என 16 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், 67வது நாளில் விஜயலெட்சுமி 17ஆவது போட்டியாளராக வைல்ட் கார்ட்டில் இணைந்தார்.
முதல் சீசனைக் காட்டிலும் இரண்டாம் சீசனில் சர்ச்சைகள், சண்டைகள் அதிகம். பொய்யான இமேஜ், பொய்யான ஓட்டிங் இவைகளாலும், ஆபாசமான கொச்சை வசனங்கள், நடத்தைகளாலும் பார்வையாளர்கள் முகம் சுளித்தனர். இருப்பினும், இரண்டாவது சீசன் 105 நாட்களை கடந்து சென்றது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு ரித்விகா, ஜனனி ஐயர், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி என பெண்கள் தேர்வாகினர். நேயர்களின் வாக்கு அடிப்படையில் ரித்விகா 30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிக்பாஸ் டைட்டில் வென்றார்.
கமல், ரித்விகாவின் பெயரை அறிவித்ததும் ரித்விகா சந்தோஷ மிகுதியில் தேம்பித் தேம்பி அழுதார். அவரது பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தனது வெற்றியை அர்ப்பணித்தார். ரித்விகாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், கோப்பையையும் பரிசாக வழங்கப்பட்டது.