ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள தடை; உயர் நீதிமன்றம்

Published:

சென்னை:
தமிழகத்தில் ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள, கட்டடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் பெரும்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் உள்ள தண்ணீரை நம்பி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அதுதவிர மழை காலத்தில் மழை வெள்ளம் இந்த ஓடை வழியாக தங்கு தடையின்றி சென்றால்தான், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது. ஆனால், இந்த ஓடையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டும், இந்த ஐகோர்ட்டும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், இந்த பெரும்பள்ளம் ஓடையில் ஈரோடு தாசில்தார் உத்தரவின்படி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆட்களை வைத்து மண்ணை கொட்டி வருகின்றனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இதனால், நீர் ஓட்டம் பாதிக்கப்படுகிறது. கனமழை பெய்தால், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கு காரணம் நீர்நிலைகளில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டதே ஆகும். எனவே, பெரும்பள்ளம் ஓடையில் மணல் கொட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும். கொட்டப்பட்ட மணலை எடுத்து, ஓடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்… – என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில்…
மனுதாரரின் இந்த வழக்கை கடந்த நவம்பர் 16-ந்தேதி நாங்கள் விசாரித்தபோது, ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மனுதாரர் கூறும் பெரும்பள்ளம் ஓடையை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். அதன்படி அதிகாரிகளும் ஆய்வு செய்ததாக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார். ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல் எல்.சந்திரகுமார், ‘இந்த நீர்நிலையை மறித்து அரசு சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். எனவே, இந்த வழக்கின் தன்மையை ஆராய்ந்ததில், ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டியதுள்ளது.

அதாவது, மனுதாரர் குறிப்பிட்ட நீர்நிலை மட்டும் அல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் சாலை உள்ளிட்ட எந்த ஒரு கட்டுமானப் பணிகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது. நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். – என்று கூறினர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img