இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
திமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மழை நிவாரண நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு விவகாரம், சாதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் மெத்தனபோக்கான அணுகுமுறையைக் கண்டித்து, தமிழக சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.
வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :-
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்வதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா மக்களின் காதில் பூ சுற்றுவதா? என்றும் 110த்துக்கு பக்கத்தில் பூஜ்ஜியம் போட்டு ஏமாற்றுகிறார் எனவும், ஜெயலலிதா ஆட்சி சந்தி சிரிப்பதாகவும் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது :-
தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யாமல் தூத்துக்குடி மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறது என அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மயிலாடுதுறை, குத்தாலம் அருகேயுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த தலித் தம்பதி குஞ்சம்மாள் – செல்லமுத்து இருவரின் சடலங்களும் பொதுப் பாதையில் எடுத்துச்செல்லப்படுவது ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு பிரச்னையை தமிழக அரசு சரியாகக் கையாளவில்லை என்று கூறியும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


