ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதன்படி காலை 5.30 மணிக்கு 8–ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. 7.15 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும், தீபாராதனைகளும் காட்டப்பட்டன. காலை 10.05 மணிக்கு கோவிலின் 4 கோபுர கலசங்கள் மற்றும் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 4 ரதவீதிகளிலும் கூடி இருந்த பக்தர்கள் ஓம் நவசிவாயா நமஹ என பக்தி கோஷமிட்டனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். ராமாயண வரலாற்றோடு தொடர்புடைய இந்த கோவில் காசிக்கு நிகராக கருதப்படுகிறது.
இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே 11–ம், தெற்கு ராமேசுவரம் மட்டுமே அமைந்துள்ளது. பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் கடந்த 2001–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவுபெற்று ராமேசுவரம் கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக புதிதாக 5 நிலைகளுடன் 91 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு பகுதியிலும் 2 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோபுரங்களுக்கும் சேர்த்து இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 16–ந் தேதி அன்று மாலை, முதல்கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 5–வது கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.
4–வது நாளான நேற்று காலை 9 மணியவில் 6வது காலயாக பூஜை நடைபெற்று பகல் 11.30 மணியளவில் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. அதன்பின் மாலை 6 மணியளவில் யாகசாலை மண்டபத்தில் 7–வது கால யாக பூஜையும், இரவு 9 மணியளவில் மகா பூர்ணாகுதி பூஜையும் நடந்தன.
கும்பாபிஷேகத்ததையொட்டி ராமேசுவரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வடமாநிலம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


